பெண்ணின் மனதை தொட்டு, தேவதையை கண்டேன், பேரரசு போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் M.காஜா மைதீன் அவர்களின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிப்பு பணிகளை துவங்கி உள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பதால் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மைனா,கும்கி,கயல்,செம்பி போன்ற தலைசிறந்த திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அவரது
எழுத்து மற்றும் இயக்கத்தில், அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான D.இமான் அவர்களின் இசையில், பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களது பேரனும், நடிகர் ஆகாஷ் அவர்களின் மகனுமான விஜய் ஶ்ரீஹரி கதாநாயனாக அறிமுகமாக, நடிகர் ‘யோகி’பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாம்போ’ திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்

.’மாம்போ’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.முன்னதாக இசையமைப்பாளர் D.இமான் படத்தின் பின்னணி இசைக் கோர்வையை தனது இசைக் குழுவுடன் வாசிக்க, படத்தின் பெயருடன் கூடிய முதல் தோற்றக் காணொளி வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் காஜா மைதீன்

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் காஜாமைதீன் அனைவரையும் வரவேற்று பேசும்பொழுது,”எங்களது அழைப்பை ஏற்று வந்திருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

பின்னர் நடிகர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் விஜயகுமார்

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜயகுமார்,”இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடியும் என்று இயக்குனர் பிரபு சாலமன் நிரூபித்துள்ளார். நிகழ்ச்சி வருகை தந்திருக்கும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஶ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார். பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து, அவரது ஆலோசனையுடன் அவரது அப்பா நடிகர் ஆகாஷ் அவர்களது ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களது ஒத்துழைப்புடன் இந்த படம் மிகப்பெரிய படமாக வந்துள்ளது. அனைவரது ஆசியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”, என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன்

இறுதியாக நன்றி தெரிவித்து இயக்குனர் பிரபு சாலமன் பேசிய பொழுது,” நான் குழந்தைகளுக்கான உலகத் தரத்திலான படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி ஒரு படம் தான் இது. தலைசிறந்த கதைக்கரு மீது நம்பிக்கை இருந்தது, மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களிடம் கதையைக் கூறினேன். பிறகு படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விழா இந்த அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. எங்களது படக்குழுவும் தங்களது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விரைவில் சிறப்பான இசை வெளியீட்டு விழாவில் சந்திப்போம். ஊடகத் துறையினரின் ஒத்துழைப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என நிறைவு செய்தார்.