
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுக்க இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு நன்றி. ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன், நன்றி,” என்றார்.
நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், “இன்று எனக்கு மிக முக்கியமான நாள். தமிழ் சினிமாவில் என் பயணம் இப்போது தான் தொடங்குகிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி,” என்றார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், “இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை, அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். இந்த மேடையில் நான் பேச காரணமான எனது தாயாருக்கும், வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி,” என்றார்.
நாயகி சாயாதேவி பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உடனும் நடிகர் விமல் உள்ளிட்டோருடனும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஐந்தாம் தேதி இப்படம் வெளியாகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்,” என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘கிடாரி’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பாடல் எழுதினார், அதற்காக அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்,” என்றார்.
இயக்குநர் மனோஜ் குமார் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவர். ஒரு குடும்பம் போல் குழுவினரை வழி நடத்தி செல்வார். இப்படத்தை மிகவுக் சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரமாதமாக தனது பணியை செய்துள்ளார். விமலுக்கு இது ஒரு மைல்கல் படமாக அமையும். இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்,” என்றார்.
நடிகர் விமல்ராஜா (வி ஆர்) பேசுகையில், “இப்படத்தில் சலீம் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை பெற உதவிய ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு நன்றி. விமல் சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். இந்த படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்,” என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என்றார்.
சாட்டை துரைமுருகன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
நாயகன் விமல் பேசுகையில், “வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை,” என்றார்.
தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், “இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்,” என்றார்.