சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் – நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை- என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பேசுகையில், ” ஒரே தருணத்தில் ‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களை தயாரிப்பதற்கு காரணம் எனகாகு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ் ,சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம்.‌ இதனை கடந்து வருவதற்கு மிக கடினமாக இருந்தது. இந்த தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடன் அபினேஷ் இளங்கோவன், தங்கராஜ், ஜீ. வி. பிரகாஷ், ஏ. எல். விஜய் ஆகியோரும் உதவினர்.

ஜீ. வி. பிரகாசுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரிடம் ஒரு பணியை கொடுத்து விட்டால்.. தன் சொந்த பணியாக நினைத்து, தயாரிப்பாளரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார்.‌ படத்தின் பின்னணி இசையை நான் இதுவரை கேட்கவில்லை. அத்துடன் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது.‌ இதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் தான் காரணம்.

இந்த படத்தில் பார்வதி- மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இருவரும் இரு வேறு எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.

பா. ரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார். இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாய சிந்தனையும், சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும்.. இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

விக்ரம் – அவருடைய பயணமானது மிகவும் கடினமானது. ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை. சினிமா- ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த வேலையை செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று. அது விக்ரமுக்கு பொருத்தமானது.‌ உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை. இந்த படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தை தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.‌ அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் என நம்புகிறேன்.‌ ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும். ” என்றார்.