
அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.
எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அகில்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம். இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாக சொல்வார். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சதாவுக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பின் போதே அவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். படம் வெளியாகும் வரை வேறு எந்த வாய்ப்பையும் ஏற்க வேண்டாம். இந்தப் படம் வெளியான பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று. இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகன் ராஜன் சார், நம்முடைய பயணம் நீண்டது. உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இன்னும் பல படங்களில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஷான் ரோல்டன் அண்ணா பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் பேசிய பிறகு எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தத் துறையில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். உங்களுடன் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
யோகி பாபு சார் இன்று இங்கு இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம். எந்தக் காட்சியாக இருந்தாலும், ஒரு நகைச்சுவை வசனம் மூலம் படப்பிடிப்பு தளத்தையே சிரிப்பால் நிரப்பிவிடுவார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தபோது, அவருடைய உற்சாகத்தையும், எளிமையையும் இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் செய்து முடிக்கும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
படம் வெளியான பிறகு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிய விதத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன். அவருடைய நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவம்.
பரத், ஐயப்பன் சார், முத்துக்குமார் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தை உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பல திரையரங்குகளுக்கு நேரில் வந்து, படத்திற்கு கிடைத்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ரசித்ததைப் பார்த்ததும் எனக்கும் பெருமையாக இருந்தது.
லல்லு, “கைதி” திரைப்படத்திலிருந்து நம்முடைய பயணம் தொடர்ந்து வருகிறது. இந்தப் படத்திலும் இணைந்ததற்கு நன்றி. அதேபோல் அம்சா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெளியீட்டை வழங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். திரையரங்குகளில் குழந்தைகள் வந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும், குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தை மனதார பாராட்டியதும் என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
இந்த அன்பும் ஆதரவும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. தொடர்ந்து நல்ல படங்களை உங்களுக்காக வழங்குவேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்.
நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,
நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விஷயம் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் இதை பகிர்கிறேன். எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணிரத்னம் சார், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார் சார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு, “படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்” என்று நினைத்தவர்கள், படம் பார்த்த பிறகு “ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப் படத்தையும் ரசித்தோம்” என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, “வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன.
ஆனால், ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும்.
இந்தப் படத்தின் மூலம் என்னை வேறு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். “வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்” என்ற எண்ணத்தை உடைத்து, எனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த மேடை வெறும் நன்றி சொல்லும் மேடை மட்டுமல்ல; இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அன்பு எனக்கு இன்னும் நிறைய நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நன்றி. வணக்கம்.
நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது..,
முதலில் “கான் சிட்டி” திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து சந்தித்தார். படம் வெற்றி பெற்றால் ஒரு சிறப்பு பரிசு தருவதாக முன்பே சொல்லியிருந்தார். அந்த வாக்குறுதியை மறக்காமல், ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார். அந்த நேர்மைக்கும், நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆரம்பத்தில் இந்தப் படத்தை ஒரு சிறிய படம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் பின்னணியில் நடந்த திட்டமிடல், தயாரிப்பு, விநியோகம், ஓடிடி ஒப்பந்தம் என அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனையும் திறமையும் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல; தயாரிப்பு, திரைக்கதை, திட்டமிடல் என திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட திறமையான படைப்பாளர். அந்தப் பல்துறை திறமையே இந்த வெற்றிக்குக் காரணம்.
இன்றைய சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்திலும் “கான் சிட்டி” திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்த வெற்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
ஒரு படம் நல்ல வசூல் பெறும்போது, அது அந்தப் படக்குழுவுக்கு மட்டுமல்ல, மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. இன்னும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும், அது ரசிகர்களிடம் சென்று சேர்ந்து வெற்றி பெறும் தருணத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. “கான் சிட்டி” படத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது.
ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம்.
இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
என்னுடைய முதல் நன்றி குணா (Post Office) மற்றும் விஜய் (Silver Tree) ஆகியோருக்கே. திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்று வரை அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.
இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், மணிகண்டன் சார், PTG Studios, வெண்ணி, ஜென்னி, என் குடும்பத்தினர், உறவினர்கள் என இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து குறித்து குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு நாள் வந்து கதையை கேட்டார். “கதை பிடித்திருந்தால் முதலீடு செய்யுங்கள். படத்தை முழுமையாக முடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று நான் சொன்னேன். மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை அனுப்பிவைத்தார். அந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
அதேபோல் மற்றொரு இணை தயாரிப்பாளரான Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். எந்தக் கேள்வியும் கேட்காமல், “தம்பி, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையோடு இந்தப் படத்தில் முதலீடு செய்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெளிநாட்டு வெளியீட்டை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்த T-Series உள்ளிட்ட என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி. ஒரு உள்ளடக்கமிக்க திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் வெளியிட உதவியது மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.
எங்கள் விநியோகஸ்தரான Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படம் பார்த்த முதல் நாளிலிருந்தே அவர் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். நடிகரின் சந்தை மதிப்பையோ, முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது அவருடைய திரைப்படப் பற்றைக் காட்டுகிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம், மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது. அந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது.
ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், மிக்ஸிங் இன்ஜினியர் உதய் சார், கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் மிகப்பெரிய ஆதரவாளர். எந்த தயக்கமும் இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றி என்னுடன் இருந்தார். அவருக்கு என் நன்றிகள். ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் சச்சின், சிறப்பு மேக்கப் கலைஞர் அப்துல், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக எடிட்டர் அருள் மோசஸ், படத்தின் இறுதி நாள் வரை, மிக்ஸிங், இறுதிச் சரிபார்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்து இந்தப் படத்தை முழுமையாக்கினார். அவருடைய அர்ப்பணிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகும்.
இந்தப் படத்தில் நடித்த அனைவரையும் பற்றி பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மூத்த கலைஞர், இன்றும் “எனக்கு வேலை வாங்கிக் கொடுங்கள், நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுவது எவ்வளவு பெரிய விஷயம் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாங்கள் சில படங்கள் நடித்துவிட்டாலே திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு கலைஞர் இன்னும் அதே ஆர்வத்துடனும், அதே பசியுடனும் வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்பது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது.
“நான் இறந்தாலும், படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்.”
அந்த வார்த்தையைக் கேட்டபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. சினிமா மீது இவ்வளவு காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. படப்பிடிப்பு முடிந்த நாளிலேயே நான் அவரிடம் சொன்னேன், “இந்தப் படம் வெளியான பிறகு அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்று. இன்று அது உண்மையாகி இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்து அன்னாபென் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு மகனின் தாயாக, வாழ்க்கையின் பல வேதனைகளை சுமந்து செல்லும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை மிகையாக இல்லாமல், மிகவும் இயல்பாகவும் அடக்கமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஒரு கட்டத்தில், “இந்தக் காட்சியில் நீங்கள் இன்னும் அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்” என்று சொன்னபோதும், “இல்லை, என் மகன் காணாமல் போன நிலையில் இருக்கும் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் அமைதியாக இருப்பாள். நான் இதை மிகைப்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார். அந்த முதிர்ச்சியும், கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்டிருந்த புரிதலும் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று மித்ரா கதாபாத்திரம். இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள், தவறான உறவுகள் போன்ற விஷயங்களை எந்தப் போதனையும் இல்லாமல், மிக இயல்பாக அந்தக் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அன்னாபென் மேடம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்தப் படத்தில் இணைந்த பிறகுதான் இந்தப் படத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்தது.
யோகி பாபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்றுகூட அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபடியே என்னுடன் பேசினார். இந்தப் படத்திற்கு அவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். முக்கியமாக, வடிவுக்கரசி அம்மா இந்தப் படத்தில் சிறப்பாக ஜொலிக்க வேண்டும் என்பதில் அவர் முழு மனதுடன் ஒத்துழைத்தார். திரைக்கதையிலேயே அந்த இடம் இருந்தாலும், ஒரு நடிகராக அந்த இடத்தை மற்றொரு கலைஞருக்காக விட்டுக்கொடுப்பது மிகப்பெரிய மனப்பான்மை. படம் முழுவதும் அவர் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், யோகி பாபு சார் இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இருந்தாலும், என் மீது வைத்திருந்த அன்பிற்காகவும் நம்பிக்கைக்காகவும் இந்தப் படத்தில் நடித்தார். அதற்காக அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
அதேபோல் அர்ஜுன் தாஸ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. ஒரு நடிகராக, மற்ற கதாபாத்திரங்களும் சமமான முக்கியத்துவத்துடன் திரையில் வருவதை ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம். அர்ஜுன் தாஸ் சார் அந்த மனப்பான்மையுடன் இந்தப் படத்தில் நடித்தார். அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு முழுமையானதாக உருவானது. அதுமட்டுமல்லாமல், போஸ்டர்களில் என் பெயருடன் அனைத்து கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்று முதலில் சொன்னவரும் அவர்தான். அந்த பெருந்தன்மைக்கும், ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
இறுதியாக, என் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த “கான் சிட்டி”, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
