“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது..,

இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், “பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம்” என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.

அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, “ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அதர்வாவை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அதை இங்கே நேரில் பார்க்க முடிகிறது. ப்ரீத்தி, கயாது உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

கார்த்திக், தமன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். நானும் தமனும் எங்கள் முதல் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு திரைப்படம். அதற்கு மேல் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. திரையரங்குகளில் சந்திப்போம். நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது:

முதலில் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தப் படத்தின் பயணம் முழுவதும் நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் பயணம் மிகவும் அழகாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் ஆற்றலுடன் கூடிய ஒரு அருமையான குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பாடல்கள், நடனங்கள், காட்சியமைப்பு என படத்தின் ஒவ்வொரு அம்சமும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரின் நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பகத் பாசில், தமன் என சர்ப்ரைஸ் நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான்.

இறுதியாக, இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘இதயம் முரளி’ ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இயக்குநர் அட்லீ பேசியதாவது:

ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், எளிமையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் சிறப்பாகப் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல், கயாது மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகையாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் படத்திற்கு அற்புதமான காட்சியமைப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தத் திரைப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது:

‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதலைக் கொண்டாடும் ஒரு அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

“இதயம் முரளி” திரைப்படம் காதல், நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, பகத் பாசில், கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன், ரக்‌ஷன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட், தமன், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள இப்படம், இளைஞர்களின் உணர்வுகளையும் காதலின் பல பரிமாணங்களையும் மனதைத் தொடும் வகையில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.